காஷ்மீர்: இந்திய எல்லைக்குள் நுழையமுயன்ற மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் சர்வதேச எல்லைவழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் உள்ள பூஞ்ச் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு படை வீரர்கள் இன்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது, பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பயங்கரவாதியின் உடலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இந்நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட மேலும் ஒரு பயங்கரவாதியின் உடலை பாதுகாப்புபடையினர் தற்போது கைப்பற்றியுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளிடமிருந்து 2 ஏகே - 47 ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.