சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் போலி செய்திகள் -சுப்ரீம் கோர்ட் கவலை
சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் போலி செய்திகள் பரவுவது குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி
ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கொரோனா குறித்து "போலி செய்திகள்" பரப்புவதை நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
கொரோனா பரவுவது குறித்து மார்கஸ் நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் கூட்டத்துடன் இணைத்து போலி செய்திகள் பரவியது. அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இணையதளங்கள் எதையும் கட்டுப்படுத்தவில்லை. செய்திகளுக்கு வகுப்புவாத வண்ணம் கொடுக்க முயற்சி நடக்கிறது அதுதான் பிரச்சினை. அது இறுதியில் நாட்டுக்கு கெட்ட பெயரைத் தருகிறது என சுப்ரீம் கோர்ட் சுட்டி காட்டியது.
போலி செய்திகள் மற்றும் இணைய தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் அவதூறு செய்வதில் கட்டுப்பாடு இல்லை. நீங்கள் யூடியூப்பிற்குச் சென்றால், போலி செய்திகள் எவ்வாறு சுதந்திரமாகப் பரப்பப்படுகின்றன என்பதை நீங்கள் காண்பீர்கள், மேலும் யூடியூபில் யார் வேண்டுமானாலும் ஒரு சேனலைத் தொடங்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டது.
தலைமை நீதிபதி ரமணா எந்த பொறுப்பும் இல்லாமல் நிறுவனங்களுக்கு எதிராக எழுதும் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்கள் நீதிபதிகளுக்கு பதிலளிக்காது. அவர்கள் "சக்திவாய்ந்த குரல்களுக்கு" மட்டுமே பதிலளிக்கின்றனர் என்றும் கூறினார்.