மேகதாது திட்டத்தை தமிழக அரசு தேவையின்றி எதிர்க்கிறது - மந்திரி கோவிந்த் கார்ஜோள்
மேகதாது திட்டத்தை தமிழக அரசு தேவையின்றி எதிர்ப்பதாக மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.
தார்வார்,
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் உப்பள்ளியில் நேற்று செய்தியாளகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
“குடிநீர் நோக்கத்திற்காக மேகதாதுவில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு தமிழக அரசு தேவையின்றி எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதற்கு எதிராக அந்த அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. கர்நாடகமும் வழக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு காவிரி நீரை சுப்ரீம் கோர்ட்டு ஒதுக்கி தீர்ப்பு கூறியுள்ளது. அந்த நீரை பயன்படுத்தி கொள்ளவே நாங்கள் அணை கட்டுகிறோம். இது தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க நாங்கள் தீவிரமான சட்ட போராட்டம் நடத்துவோம்.”
இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.