கேரளாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து- முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் தொடர்ந்து 30 ஆயிரத்தைக் கடந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாகச் சற்று குறைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை 26,701 பேருக்கு கொரோனா உறுதியானது.
அதனைத்தொடர்ந்து திங்கள் கிழமை 19,688 பேருக்கு கொரோனா உறுதியானது. கடந்த 24 மணிநேரத்தில் 25,772 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகிய இரு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுவதாக முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4 முதல் வகுப்புகள் தொடங்கும் எனவும் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் முக்கியம் என்பதால், ஆசிரியர்கள் இந்த வாரத்திற்குள் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.