செம்மரக்கட்டை கடத்தல்; ஆந்திராவில் தமிழகத்தின் 13 பேர் கைது
செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தின் 13 பேரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலுார்,
ஆந்திர மாநிலம், கொந்தலா செருவு சோதனை சாவடியில், அம்மாநில போலீசார் கடந்த 4ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு டேங்கர் லாரி, மூன்று கார்களை நிறுத்தினர். டேங்கர் லாரியை நிறுத்தியவர்கள், தயாராக இருந்த காரில் ஏறி தப்பினர். டேங்கர் லாரியில் 3.5 டன் எடையில், 155 செம்மரக்கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.2 கோடி.
விசாரணையில் வேலுார், திருப்பத்துார் மாவட்ட பகுதியை சேர்ந்தவர்கள் கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது. கும்பலை தேடி ஆந்திர தனிப்படை போலீசார் தமிழகம் வந்தனர். திருப்பத்துார், வேலுார் மாவட்டங்களை சேர்ந்த, 24 - 27 வயதுள்ள 13 வாலிபர்களை நேற்று கைது செய்து, மூன்று கார்களை பறிமுதல் செய்தனர். அனைவரும் கடப்பா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.