கேரளா: போதைப்பொருள் கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

கேரளாவில் போதைப்பொருள் கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-11 20:24 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 32 வயது நிரம்பிய பெண்ணுக்கு கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த அஜ்னேஷ் என்பவருடன் டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையில், அஜ்னேஷ் அந்த பெண்ணை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கோழிகோட்டில் உள்ள ஷிவயூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அந்த பெண்ணுக்கு போதைப்பொருள் மற்றும் மது கொடுத்துள்ளார். இதனால், அந்த பெண் மயக்கமடைந்துள்ளார்.

அதன்பின்னர் அந்த விடுதியில் வேறு அறைகளில் திட்டமிட்டு தங்கியிருந்த அஜ்னேஷின் 3 நண்பர்கள் அஜ்னேஷின் அறைக்கு வந்துள்ளனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்த அந்த பெண்ணை அஜ்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த பெண் மயங்கிய நிலையில் இருந்ததால் அவரை அஜ்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தப்பிச்சென்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த பெண் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது குறித்து மருத்துவ ஊழியரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அஜ்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் நிஜேஷ், ஷூஹைப், பஹத் என 4 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்