எனது இறுதி மூச்சு உள்ள வரை உண்மைக்காக போராடுவேன்-நவ்ஜோத் சிங் சித்து
எனது இறுதி மூச்சு உள்ள வரை உண்மைக்காக போராடுவேன் என நவ்ஜோத் சிங் சித்து டுவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி
பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இது அமரிந்தர் சிங் அவமானமாக கருதினார். இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையானது.
இதை தொடர்ந்து முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.
நவ்ஜோத் சிங் சித்துவுடனான கடுமையான மோதலைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, கேப்டன் அமரிந்தர் சிங் நேற்று திடீர் பயணமாக டெல்லி சென்றார். அங்கு அவர் பா.ஜ.க தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.அமரிந்தர் சிங் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதால் அவர் பாரதிய ஜனதாவில் இணையப் போவதாக பேச்சுகள் அடிபட்டன.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக நவ்ஜோத்சிங் சித்து தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
இந்த நிலையில், நவ்ஜோத் சிங் சித்து இன்று காலை டுவிட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், எனது நெறிமுறைகள், அதிகாரம் ஆகியவற்றில் என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது. உயர் அதிகாரிகளை தவறாக வழிநடத்தவும் முடியாது.
எனக்கு யாருடனும் தனிப்பட்ட போட்டி இல்லை. கடந்த 17 ஆண்டுகளாக எனது அரசியல் வாழ்க்கையில் நிலைப்பாடுகள் ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி மாற்றங்கள் ஏற்படுத்துவதையே என்னுடை ஒரே நோக்கமாக கொண்டிருக்கிறேன். என் இறுதி மூச்சு வரை உண்மைக்காக போராடுவேன் என அவர் தெரிவித்து உள்ளார்.