ஒரு பீடிக்கு சண்டை - தந்தையை கொன்ற மகன்..!

பீடி தரவில்லை என்று கூறி தந்தையை மகன் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-02-23 10:21 GMT
கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் பீடி கேட்டு தராததால் தந்தையை மகன் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் பர்பேட்டா மாவட்டத்தில் உள்ள அலிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லால்மியா (வயது 50). அவரது மகன் சம்சுல் ஹோக் (வயது 30). நேற்று லால்மியா பீடி குடித்துக் கொண்டு இருக்கும் போது, சம்சுல் தனக்கும் பீடி வேண்டும் என்று தன் தந்தையிடம் கேட்டுள்ளார். லால்மியாவும் கொடுத்துள்ளார். 

முதல் பீடியை குடித்து முடித்த சம்சுல் மீண்டும் ஒரு பீடி கேட்டுள்ளார். இந்த முறை தந்தை லால்மியா தரமுடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த சம்சுல் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறவே, சம்சுல் கூர்மையான கத்தி ஒன்றை கொண்டு தந்தை லால்மியாவைக் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த தந்தை லால்மியா சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளி சம்சுலை கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்