"ஓட்டல்களில் தங்கக்கூடாது; உறவினர்களை உதவியாளராக நியமிக்கக்கூடாது" - உ.பி. மந்திரிகளுக்கு யோகி ஆதித்யநாத் கிடுக்கிப்பிடி

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-13 21:53 GMT
கோப்புப் படம் PTI
லக்னோ,

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அவர் கிடுக்கிப்பிடி உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேச மந்திரிகள், அரசுமுறை பயணமாக வெளியூர் செல்லும்போது, ஓட்டல்களில் தங்கக்கூடாது. விருந்தினர் விடுதிகளில்தான் தங்க வேண்டும். அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மந்திரிகள், தங்கள் உறவினர்களை தனி உதவியாளர்களாக நியமிக்கக்கூடாது. 

அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும். தாமதமாக வருபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதிய உணவை 30 நிமிடத்துக்குள் சாப்பிட்டு முடித்து பணிக்கு திரும்ப வேண்டும். உயர் அதிகாரிகள் அவ்வப்போது அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். மெத்தனமாக செயல்படும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் கூறும் புகார்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அலுவலகத்திலும் குடிமக்கள் சாசனத்தை திறம்பட அமல்படுத்த வேண்டும். எந்த கோப்புகளும் 3 நாட்களுக்கு மேல் தேங்கி இருக்கக்கூடாது. தாமதம் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பு என்பதை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்