மத்திய மந்திரி அமித்ஷா இன்று பெங்களூரு பயணம் - மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பசவராஜ் பொம்மை ஆலோசனை

நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் நடைபெறும் பல்வேறு நகிழச்சிகளில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார்.

Update: 2022-05-02 00:03 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று சொந்த பலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இப்போதில் இருந்தே கர்நாடகத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் பா.ஜனதா மேலிடம் இறங்கி உள்ளது. இதையடுத்து, பா.ஜனதா மேலிட தலைவர்கள் கா்நாடகத்தில் முகாமிட்டு கட்சியை வளர்க்கவும், தேர்தல் வியூகங்களை வகுக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று (திங்கட்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். அதாவது டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு இன்று இரவு 11.20 மணியளவில் அமித்ஷா வர இருக்கிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் நடைபெறும் பல்வேறு நகிழச்சிகளில் அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார்.

நாளை காலை 9.55 மணியளவில் பெங்களூருவில் உள்ள பசவேசுவரா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளாா். மதியம் 12 மணியளவில் சாத்தனூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்க உள்ளார். அதன்பிறகு, மதியம் 1.30 மணியளவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டில் நடைபெறும் விருந்தில் கலந்து கொள்கிறார். 

மதியம் 2.30 மணியளவில் மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை மாலை 5.30 மணியளவில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் அமித்ஷா தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளார்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி விட்டு, இந்த வார இறுதிக்குள் மந்திரிசபை மாற்றியமைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் அமித்ஷாவின் வருகையை எதிர்பார்த்து மந்திரி பதவிக்காக காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் ஆவலோடு உள்ளனர்.

மேலும் செய்திகள்