மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு உதவிய திகார் சிறை அதிகாரி கைது

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் குற்றச்செயல்களுக்கு உதவியதாக திகார் சிறையின் உதவி சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-03 22:33 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகர். மேலும் பல பண மோசடி வழக்குகளில் சிக்கியுள்ளார். சிறையில் இருக்கும்போதும் அவர் தனது மோசடி வேலையை விடவில்லை.

தொழில் அதிபர் ஒருவரின் மனைவியிடம் ரூ.200 கோடியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் திகார் சிறையிலேயே இருக்கிறார்.

மோசடி மூலம் கிடைத்த பணத்தை கொண்டு சிறையிலும் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அந்த வசதிகளை அவர் பெற்றுள்ளார். குறிப்பாக தனி அறை, செல்போன் போன்றவற்றை பெற்றதாகவும், நண்பர்களை சிறையில் உள்ள தனது அறைக்கே வரவழைத்து விருந்து அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கெல்லாம் சிறை அதிகாரிகள் உதவி புரிந்துள்ளனர். ஆதாரங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு கேமராக்களை சிறை அதிகாரிகள் போர்வையை கொண்டு மறைத்துள்ளனர்.

இப்படி சுகேஷ் சந்திரசேகருக்கு உதவி புரிந்த சிறை அதிகாரிகளின் விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரித்தனர். இதன்படி அந்த பட்டியலில் 82 பேர் இடம்பெற்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திகார் சிறை நிர்வாகத்துக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே கடிதம் எழுதினார்கள். அதன்பேரில் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் சுகேஷ் சந்திரசேகரின் குற்றச்செயல்களுக்கு உதவியதாக திகார் சிறையின் உதவி சூப்பிரண்டு பிரகாஷ் சந்த் (வயது 57) தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இவர் மீது 15-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் மீது இந்த கைது நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்