டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம்..!!
கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் குடும்பத்தினருக்கு டெல்லி சுகாதார மந்திரி ரூ.1 கோடி நிவாரணத்தொகையை வழங்கினார்.
புதுடெல்லி,
டெல்லி மகரிஷி வால்மீகி ஆஸ்பத்திரியில் குழந்தைநல டாக்டராக பணிபுரிந்து வந்தவர் சஞ்சீவ்குமார். இவர் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது, கட்டுப்பாடு பகுதியில் இருந்தவர்களுக்கும், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான டாக்டர் சஞ்சீவ்குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் சிகிச்சை பெற்றநிலையில் உயிரிழந்தார். அவரது குடும்ப உறுப்பினர்களை நேற்று சந்தித்து ஆறுதல் கூறிய டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின், அவர்களிடம் ரூ.1 கோடி நிவாரணத்தொகையை வழங்கினார்.
கொரோனாவுக்கு எதிரான போரில் இறந்தவர்களின் இழப்பை இந்த நிவாரணத்தொகை ஈடுசெய்ய முடியாது என்றாலும், அந்த குடும்பங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
இதுவரை, தொற்றுக்கு பலியான கொரோனா முன்கள பணியாளர்கள் 37 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடியை டெல்லி அரசு வழங்கியுள்ளது.