ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்ந்ததன் மூலம் ஜி20 அமைப்பு மேலும் வலுப்பெறும் - பிரதமர் நரேந்திர மோடி டுவீட்

ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்ந்ததன் மூலம் ஜி20 அமைப்பு மேலும் வலுப்பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

Update: 2023-09-09 10:59 GMT

image courtesy: Cyril Ramaphosa twitter

புதுடெல்லி,

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது. பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார். அப்போது ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக முன்மொழிந்தார். உலகத் தலைவர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, "உங்கள் அனைவரின் ஆதரவுடன், ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் சேர அழைக்கிறேன்" என்றார்.

இதையடுத்து ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர் அசாலி அசோமணியை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அழைத்து வந்தார். ஜி20 தலைவர்களுக்கான இருக்கை வரிசையில் ஆப்பிரிக்க ஒன்றிய தலைவருக்காக தனி இருக்கை போடப்பட்டிருந்தது. ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர் அசாலி அசோமணியை பிரதமர் மோடி முறைப்படி வரவேற்று இருக்கையில் அமர வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் இன்று இணைந்துள்ளது. இதன் காரணமாக ஜி20 அமைப்பு இனி ஜி21 அமைப்பாக மாறுகிறது.

இந்த நிலையில் ஜி20 நாடுகளின் கூட்டமைப்பில் 21-வது நாடாக ஆப்பிரிக்க ஒன்றியம் இணைந்துள்ள நிலையில், ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்ந்ததன் மூலம் ஜி20 அமைப்பு மேலும் வலுப்பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 குடும்பத்தை வலுப்படுத்துவதன் மூலம், சிறந்த கிரகத்திற்கு வழிவகுக்கும் அனைத்து வகையான வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிக்கும் கூட்டாண்மைகளை உறுதிப்படுத்துவோம்" என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்