ஹாசனில் சிறைச்சாலையில் பழங்களுக்குள் பதுக்கி கைதிகளுக்கு கஞ்சா வினியோகிக்க முயற்சி

ஹாசனில் உள்ள சிறைச்சாலையில் பழங்களுக்குள் பதுக்கி கைதிகளுக்கு கஞ்சா வினியோகிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-04 18:45 GMT

ஹாசன்:-

சிறைச்சாலை

ஹாசன் (மாவட்டம்) டவுனில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. சிறைச்சாலையில் உள்ள கைதிகளை குறிப்பிட்ட நாட்களில் அவர்களது குடும்பத்தினர் வந்து பார்க்க அனுமதி உண்டு. அதன்படி நேற்று முன்தினம் காலையில் சிறையில் உள்ள கைதி ஒருவரை பார்க்க 2 பேர் வந்தனர். அவர்கள் அந்த கைதிக்கு வழங்க பழங்களும் வைத்திருந்தனர்.

அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சிறைக்காவலர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பழங்களையும் பரிசோதித்தனர். அப்போது அந்த பழங்களுக்குள் அவர்கள் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

அதையடுத்து அவர்கள் இருவரிடமும் சிறை காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஹாசன் டவுன் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தப்ரேஷ், பென்சன் மொகல்லா பகுதியைச் சேர்ந்த வாசிம் என்பதும், இருவரும் இதுபோல் பலமுறை சிறைக்கு கைதிகளை பார்க்க வந்து கஞ்சாவை வினியோகித்து இருந்ததும் தெரியவந்தது.

அதுமட்டுமின்றி அவர்கள் சிறையின் மதில் சுவர் வழியாக பழங்களுக்குள் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வீசி கைதிகளுக்கு வினியோகித்ததும் தெரியவந்தது.

அதையடுத்து தப்ரேஷ் உள்ளிட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது ஹாசன் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்