மக்களவை தேர்தலில் 330 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

பாஜக கூட்டணியில் அதிமுக சுதந்திரமாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2023-07-19 03:08 GMT

புதுடெல்லி,

டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பின் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. உலக அளவில் இந்தியாவின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தபோதும், இந்தியாவில் பாதிப்பை குறைக்கும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய, பெரிய கட்சிகள் என்று இல்லாமல், அனைத்து கட்சிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது. பாஜக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துகளுடன் இருக்கின்றன. பாஜக கூட்டணியில் அதிமுக சுதந்திரமாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் திமுக அடிமையாக உள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. மக்களவை தேர்தலில் 330 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும்.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம்தான். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதே கனிமொழி, ஆ.ராசா இருவரையும் 2ஜி வழக்கில் கைது செய்து திகாரில் அடைத்தது. அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டை வைப்பதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை. அதிமுக எப்போதும் கொள்கையில் இருந்து விலகாது; சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாகவும், பிரதான எதிர்க்கட்சியாகவும் அதிமுக உள்ளது. அதிக உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சி அதிமுக. அதிமுக சிறப்பான ஆட்சியை தரும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடம் தற்போது இருக்கிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக ஆட்சியில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்