4 வயது மகனை கொன்ற பெங்களூரு பெண் அதிகாரி யார்?.. சிக்கியது எப்படி? அதிர வைக்கும் தகவல்

கோவாவில் ஓட்டல் அறையில் 4 வயது மகனை கொடூரமாக கொன்ற பெங்களூரை சேர்ந்த பெண் சுசானா சேத் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-01-09 12:47 GMT

பெங்களூர்,

கணவரிடம் விவாகரத்து பெற்ற நிலையில் 4 வயது மகனை பெண் தொழில் அதிபர் சுசனா சேத் கொடூரமாக கொன்ற சம்பவம் நடந்துள்ளது. கோவாவில் உள்ள நட்சத்திர விடுதியில் தனது மகனை கொன்று விட்டு உடலை அவர் சூட்கேசில் வைத்து வாடகை காரில் கொண்டு வந்தபோது போலீசாரிடம் சிக்கினார்.

பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, தனது கணவர் வெங்கடரமணாவுடன், தன்னுடைய மகன் வீடியோ அழைப்பில் பேசுவது சுசனா சேத்துக்கு பிடிக்காமல் இருந்துள்ளது, எங்கு தனது கணவர் தன்னிடம் இருந்து மகனை பிரித்து சென்று விடுவாரோ என்று சுசனா சேத் பயத்தில் இருந்துள்ளார். மேலும் அவர் தனது கணவர் வெங்கடரமணா மீதும் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் தனது கணவரை பழிவாங்க எண்ணி மகனை கொலை செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பிரபல தொழில் அதிபரான சுசனா சேத் தான் பெற்ற மகனையே கொலை செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யார் இவர்?

சுசனா சேத் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் ஆவார். இவரது கணவர் வெங்கடரமணா. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் என்ஜினீயர் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சுசனா சேத்தும் என்ஜினீயர் ஆவார். அவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தார். திருமணத்திற்கு பிறகு அவர் பெங்களூருவில் கணவருடன் வசித்து வந்தார். பின்னர் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே 2020 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றார்.

சுசனா சேத், தகவல் அறிவியல் மற்றும் தொடக்கநிலை நிறுவனங்கள் பிரிவில் வல்லுனர் ஆவார். அவரது ஆலோசனைகளை பெற்று நிறுவனங்கள் தொடங்க பலர் காத்துக்கிடப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த 2021-ம் ஆண்டு சிறந்த 100 பெண் தொழில் அதிபர்களின் பட்டியலிலும் சுசனா சேத் இடம்பிடித்து இருந்தார். இதன்மூலம் அவர் மிகவும் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்