சுப்ரீம் கோர்ட்டு நடைமுறைகள் நேரடி ஒளிபரப்பு காப்புரிமையை பாதுகாக்கக் கோரும் வழக்கு - நாளை விசாரணை
நேரடி ஒளிபரப்பு காப்புரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்புவது மற்றும் அவற்றின் தவறான பயன்பாடுகளை தவிர்ப்பது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான நடைமுறைகளை வகுத்து 2018-ல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், அரசியல் சாசன அமர்வின் விசாரணையை, நேரடியாக ஒளிபரப்பும் முயற்சி துவங்கியுள்ளது. இது யூ-டியூப் சமூக வலைதளம் வாயிலாக ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில், யூ-டியூப் என்ற தனியார் சமூக வலைதளத்துக்கு காப்புரிமை வழங்கப்படாமல், உரிய முறையில் காப்புரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் 10-ந்தேதி(நாளை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதனை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரிக்க உள்ளது.