கோரமண்டல் ரெயில் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

கோரமண்டல் ரெயில் விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update:2023-06-02 21:55 IST

புவனேஷ்வர்,

கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பலாஷோர் அருகே சரக்கு ரயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் ரயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ரயிலின் 8 பெட்டிகள் வரை தடம் புரண்டதாகவும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வரை இயக்கப்படுகிறது. வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாகவும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடப்பதாகவும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.கவிழ்ந்து கிடக்கும் ரயிலுக்குள் இருந்து காயம் அடைந்த பயணிகள் மீட்கப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரயில் மீது தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் 122 பேர் காயம் அடைந்து இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ரெயில் விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

ஒடிசா அருகே ரயில்கள் விபத்துக்குள்ளானது அதிர்ச்சி அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மீட்பு பணிகளை கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கையை துரிதமாக எடுக்கவும் ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்