சீனாவை சேர்ந்தது உள்பட 232 வெளிநாட்டு செயலிகள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை
சீனாவை சேர்ந்த செயலிகள் உள்பட 232 வெளிநாட்டு செயலிகளை மத்திய அரசு முடக்கியது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
மின்னணு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், ஏராளமான செயலிகள் (ஆப்) புற்றீசல் போல் முளைத்து வருகின்றன. அவற்றில் குறிப்பிட்ட செயலிகள், தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்போது, அவற்றை மத்திய அரசு முடக்கி வருகிறது.
அந்தவகையில், வெளிநாட்டு நிறுவனங்களால் இயக்கப்பட்டு வரும் 232 செயலிகளை தற்போது மத்திய அரசு முடக்கி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிபாரிசின்பேரில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடன் சேவை
இந்த செயலிகளில் 138 செயலிகள், பந்தயம் கட்டுதல், சூதாட்டம், சட்டவிரோத பண பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தன. மீதி 94 செயலிகள், அனுமதி பெறாமல், கடன் வழங்கும் சேவையில் ஈடுபட்டு வந்தன. 2 தனித்தனி உத்தரவுகள் மூலம் இவை முடக்கப்பட்டன.
இந்த செயலிகளில் சீனாவை சேர்ந்தவையும் அடங்கும். நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருந்ததால், இவை முடக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முடக்கப்பட்ட செயலிகளின் பெயர்களை அவர் தெரிவிக்கவில்லை.