கர்நாடக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை

கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-06-21 15:04 GMT

மங்களூரு;

கடலோர மாவட்டங்கள்

கர்நாடகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோடை மழை பெய்தது. குறிப்பாக தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மலைநாடு, கடலோர மாவட்டங்களில் பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த 4 நாட்களுக்கு...

இந்த நிலையில் கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது:-

கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும். வருகிற 23-ந்தேதி(நாளை), 24-ந்தேதி ஆகிய 2 நாட்களுக்கு தீவிர மழை பெய்யும். பலத்த காற்றுடன் 11.5 செ.மீ. முதல் 20.4 செ.மீ. வரை மழை பெய்யும். அதனால் கடலோர மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தட்சிண கன்னடாவில் நேற்று காலை வரை வெயில் இருந்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மழை பெய்தது. இதேபோல் உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களும் லேசான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்