தார்வாரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

தார்வாரில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-12 18:45 GMT

உப்பள்ளி-

தார்வார் டவுன் பகுதியில் வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் முயற்சியில் போலீசார் வாகன ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் கஞ்சா விற்பனை செய்யும் சம்பவங்கள் குறைந்த பாடில்லை. இந்தநிலையில் வித்யாகிரி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கங்காநகர் பகுதியை சேர்ந்த பிரமோத் (வயது26), ரவி (23) என்பதும், அவர்கள் அந்தப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வித்யாகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்