கேரள செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்
முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு, அவசரகால எண்ணில் இருந்து கடந்த வாரம் மிரட்டல் விடப்பட்டு இருந்தது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் உள்ள செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என அவசரகால எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தெரிவித்து விட்டு, போனை வைத்து விட்டார்.
கேரள காவல் துறை தலைமையகத்திற்கு வந்த இந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பை தொடர்ந்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, கேரள தலைமையகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
எனினும், சோதனையில் எதுவும் சிக்கவில்லை. அது போலியான மிரட்டல் அழைப்பு என தெரிய வந்தது. இதுபற்றி விசாரணை செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
கடந்த வாரம் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு, அவசரகால எண்ணில் இருந்து மிரட்டல் விடப்பட்டு இருந்தது. இதில், எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் மிரட்டல் அழைப்பை விடுத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. சிறுவனை கைது செய்ய வேண்டாம் என முடிவெடுத்த போலீசார், சிறுவனின் பெற்றோரிடம் அறிவுரை கூறினர்.