தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த வேண்டும்; மண்டியா எம்.பி. சுமலதா வலியுறுத்தல்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த வேண்டும் என்று மண்டியா நாடாளுமன்ற தொகுதி எம்.பி. சுமலதா வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-09-01 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதி எம்.பி.யும், நடிகை சுமலதா அம்பரீஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட்டுள்ளதை கண்டித்து பல்வேறு விவசாய சங்கத்தினர் மண்டியாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு எனது ஆதரவு உண்டு. நமது நீர் நமது உரிமை. நமது விவசாயிகளே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் நிலையில் நமது விவசாயிகளுக்கு அநீதி இழைத்து மற்றவர்களுக்கு தண்ணீர் வழங்குவது சரியான நடவடிக்கை அல்ல. உடனே தண்ணீர் திறந்து விட்டுள்ளதை நிறுத்த வேண்டும். நமது விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். விவசாயிகள் பாசனத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கும் நீர் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த பிரச்சினைக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும். நமது விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

இவ்வாறு சுமலதா எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்