வடிவேலு பட பாணியில், கணவரை ஏமாற்றி விட்டு 5-வது காதலனுடன் ஓடிப்போன பெண்...!

தனது மனைவி 4 முறை வெவ்வேறு நபர்களுடன் ஓடியதாகவும் தற்போது 5-வது முறையாக ஓடிவிட்டதாகவும் அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2023-07-23 05:31 GMT

பெங்களூரு,

மருத மலை படத்தில் போலீஸ் ஏட்டாக இருக்கும் வடிவேலுவிடம் ஒரு புகார் வரும். காதல் ஜோடி ஒன்று தங்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மாலையும் கழுத்துமாக வந்து நிற்பார்கள். வடிவேலும் என்ன விஷயம் என விசாரிக்க ஓடிவந்த பெண்ணின் முந்தைய கணவர்கள் என வரிசையாக நான்கு பேர் வந்து நிற்பார்கள். அவர்களை சீட்டு குலுக்கி போட்டுத் தேர்வு செய்வதாக வடிவேலு கூறுவார்.

நகைச்சுவைக்காக அமைக்கப்பட்டு இருக்கும் காட்சியை மிஞ்சும் வகையில் தற்போது கர்நாடகம் மாநிலம் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அது குறித்த விவரம் வருமாறு:-

                                      பெங்களூர் புறநகர் அருகே உள்ள நெலமங்களா பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். தொழிலாளியான மனோகருக்கும் அர்பிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாக இவர்களது திருமண வாழ்க்கை சென்றது.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளது. அபிர்தா சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி வருவதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வரும் வீடியோக்களை பார்த்து ரசிப்பது, லைக் போடுவது என இருந்துள்ளார். அபிர்தாவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். அப்போது இதன் மூலமாக அபிர்தாவுக்கு தினகர் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவேற்றம் செய்து வந்துள்ளனர். தொடர்ந்து போன் நம்பரையும் பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் பேசி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. எந்நேரமும் போனில் மூழ்கிக் கிடந்ததால், அர்பிதா மீது அவரது கணவர் மனோகருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரும் கண்காணித்ததில் அர்பிதாவும் அவரது சமூக வலைத்தள நண்பரான தினகரும் காதலித்ததை கண்டுபிடித்தார். இதனால் கோபம் அடைந்த மனோகர் தனது மனைவி அர்பிதாவிடம் இது குறித்துக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக அர்பிதா குழந்தைகளை விட்டு விட்டு திடீரென மாயம் ஆனார். இதனால் பதறிப்போன கணவர் மனோகர் தனது மனைவியை அப்பகுதி முழுவதும் தேடிப் பார்த்தார். உறவினர் வீட்டிற்கு சென்று இருக்கலாம் எனக் கருதி அங்கும் தேடிப் பார்த்துள்ளார். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் மனோகர் தனது மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தார். அந்த புகாரைப் பார்த்து ஒரு நிமிடம் போலீசாரே தலை சுற்றிப் போயினர்.

அந்த புகாரில், ஏற்கனவே தனது மனைவி 4 முறை வெவ்வேறு நபர்களுடன் ஓடிவிட்டதாகவும் தற்போது 5-வது முறையாக ஓடிவிட்டதாகவும் கூறினார். இதற்கு முன்பு நான்கு முறை ஓடிய அர்பிதாவை அவரது கணவரே மீட்டு தன்னுடன் குடும்பம் நடத்த அழைத்து வந்துள்ளார்.

ஆனாலும் 5-வது முறையாக கணவருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு அர்பிதா புதிதாக ஒரு வாலிபருடன் ஓடியிருக்கிறார்.

இந்த நிலையில், மனோகர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அர்பிதாவை தேடி வருகின்றனர். சமூக வலைத்தள காதலனுக்காகப் பெற்ற குழந்தைகள் மற்றும் தாலி கட்டிய கணவரை விட்டு விட்டு புதிய காதலனுடன் பெண் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவத்தை கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்