தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க உத்தரவு

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2023-05-29 23:55 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மிசோரம் மாநில சட்டசபை ஆட்சிக்காலம் வருகிற டிசம்பர் 17-ந் தேதி முடிவடைகிறது.

தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மத்தியபிரதேச சட்டசபைகளின் ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைகிறது.

மிசோரமில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மத்தியபிரதேசத்தில் பா.ஜனதாவும், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் காங்கிரசும் ஆட்சியில் இருக்கின்றன.

இந்நிலையில் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள இந்த 5 மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், 5 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், புதிதாக சிறப்பு தொகுப்பு ஆய்வுகளை நடத்தி, வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்தின் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, தகுதிப்படுத்தும் நாளை அடிப்படையாக கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

வருகிற அக்டோபர் 1-ந் தேதி அன்று அல்லது அதற்கு முன்பாக 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்