பண்டாராவில் பெண்ணை கற்பழித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை- சிவசேனா வலியுறுத்தல்

பண்டாராவில் பெண்ணை கற்பழித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிவசேனா வலியுறுத்தியது.

Update: 2022-08-07 18:07 GMT

மும்பை,

பண்டாராவில் பெண்ணை கற்பழித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

பெண் கற்பழிப்பு

மும்பை கோண்டியாவை சோ்ந்த 35 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் சண்டை போட்டு கொண்டு, பண்டாராவில் உள்ள சகோதரன் வீட்டுக்கு வந்தார். அப்போது வழியில் 3 பேர் பெண்ணுக்கு உதவி செய்வதாக நடித்து, அவரை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்தனர். மேலும் பெண்ணை சாலையில் வீசி சென்றனர்.

இதன்காரணமாக உடல்நிலை மிகவும் மோசமான பெண் தற்போது நாக்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

கடும் நடவடிக்கை

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை நாக்பூர் அரசு ஆஸ்பத்திரியில் செய்தி தொடர்பாளர் மனிஷா காயன்டே தலைமையில் சிவசேனா பிரதிநிதிகள் 3 பேர் பார்த்தனர். மேலும் அவர்கள் டாக்டர்களை சந்தித்து பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் மனிஷா காயன்டே கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிதி உதவி மற்றும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். வழக்கின் விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் பெண் தற்போது வரை சுயநினைவு இன்றி தான் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்