2 மாநகராட்சி ஊழியர்கள் பணி இடைநீக்கம்- கமிஷனர் உத்தரவு

முறைகேடாக ஒப்பந்த பணிகளை வழங்கிய 2 மாநகராட்சி ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து மும்பை மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2022-11-24 18:45 GMT

மும்பை, 

முறைகேடாக ஒப்பந்த பணிகளை வழங்கிய 2 மாநகராட்சி ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து மும்பை மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

மனைவிமார் நடத்தி வந்த நிறுவனம்

மும்பை பாந்திரா கிழக்கு எச் வார்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் ரத்னேஷ் போஸ்லே. இதேபோல டி வார்டில் ஊழியராக பணிபுரிந்தவர் அர்ஜூன் நார்லே. இவர்கள் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பராமரிப்பு துறைகளில் வேலை பார்த்து வந்தனர். கொரோனா காலத்தில் மாநகராட்சியின் ஒப்பந்த பணிகளை முறைகேடாக ஊழியர்களின் மனைவிமார் நடத்தி வரும் தனியார் நிறுவனங்கள் மூலம் பெற்று வருமானம் பார்த்து வருவதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.

இந்த புகாரின் படி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அர்ஜூன் நார்லேவின் மனைவி அபர்ணா ஸ்ரீ எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனத்தையும், ரத்னேஷ் போஸ்லே மனைவி ரியா ஆர்ஆர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வந்தது தெரியவந்தது.

முறைகேடான பணிகள்

கொரோனா தொடர்பான பல்வேறு ஒப்பந்த பணிகளை இருவரும் தாங்கள் மனைவிமார் நடத்தி வரும் நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கி வந்து உள்ளனர். இதில் முக்கியமாக வாகனங்கள் வாடகை, தண்ணீர் சுத்திகரிப்பான், தீரைச்சீலைகள், பேனர்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், கொரோனா பராமரிப்பு மையம் போன்ற ஒப்பந்த பணிகளை ரூ.66 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் மேற்குறிப்பிட்ட 2 நிறுவனங்கள் செய்து வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மாநகராட்சி கூடுதல் கமிஷனர் 2 ஊழியர்களையும் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்