தகுதி நீக்க வழக்கு நோட்டீசுக்கு பதில் அளிக்க கூடுதல் கால அவகாசம் கேட்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்
தகுதி நீக்க வழக்கு நோட்டீசுக்கு பதில் அளிக்க சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூடுதல் கால அவகாசம் கேட்டு உள்ளனர்.
மும்பை,
தகுதி நீக்க வழக்கு நோட்டீசுக்கு பதில் அளிக்க சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூடுதல் கால அவகாசம் கேட்டு உள்ளனர்.
சபாநாயகர் நோட்டீஸ்
சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அதுதொடர்பான முடிவை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் விசாரித்து வருகிறார். அவர் கடந்த 8-ந் தேதி தகுதி நீக்க வழக்கு தொடர்பாக பதில் அளிக்க ஏக்நாத் ஷிண்டே உள்பட அவரது தரப்பை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்களுக்கும், உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அவர் எம்.எல்.ஏ.க்களுக்கு பதில் அளிக்க 7 நாட்கள் அவகாசம் கொடுத்து இருந்தார்.
கூடுதல் கால அவகாசம்
இந்தநிலையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு தொடர்பான நோட்டீசுக்கு பதில் அளிக்க கூடுதல் அவகாசம் கேட்டு உள்ளனர். இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ. சஞ்சய் ஷிர்சாட் கூறுகையில், "கடந்த திங்கட்கிழமை தான் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் எனக்கு கிடைத்தது. எனது வக்கீலை கலந்து ஆலோசித்துவிட்டு பதில் அளிப்பேன். பதில் அளிக்க கூடுதல் கால அவகாசம் கேட்பேன்" என்றார்.