மும்பையில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொலை

மும்பை காந்திவிலியில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-10-01 18:45 GMT

மும்பை, 

மும்பை காந்திவிலியில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் பலி

மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்தவர் அங்கித் யாதவ் (வயது26). இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் காந்திவிலி லாஜிபாடா பகுதியில் உள்ள லிங் ரோட்டில் பேசி கொண்டு இருந்தார். அப்போது இரவு 11.30 மணியளவில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென துப்பாக்கியால் அங்கித்யாதவ் மற்றும் அவரது நண்பர்களை நோக்கி 4 முறை சுட்டனர். பின்னர் அங்கு இருந்து தப்பி சென்றனர்.

இந்தநிலையில் துப்பாக்கியால் சுட்டதில் அங்கித் யாதவ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் அங்கித் யாதவ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்விரோதம்

வாலிபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தால் லாஜிபாடா பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலையாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தினர். இதேபோல அந்த பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்தது தெரியவந்து உள்ளது. அங்கித் யாதவுக்கும், சோனு பஸ்வான் என்பவருக்கும் கடந்த மாதம் நடந்த கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் தான் அங்கித் யாதவை கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கொலை, ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்