வானவில் : பேட்டரி காரை அறிமுகப்படுத்துகிறது எம்.ஜி. நிறுவனம்

இந்தியாவில் ஹெக்டர் காரை அறிமுகப்படுத்தி தனது வரவை உறுதி செய்து கொண்டுள்ள மோரிஸ் காரேஜ் (எம்.ஜி.) நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பாக பேட்டரி காரை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

Update: 2019-11-13 09:35 GMT
எம்.ஜி. நிறுவனத்தின் முதலாவது எஸ்.யு.வி. காரான ஹெக்டருக்கு 38 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து அடுத்ததாக சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரி காரை உருவாக்கும் பணியில் இந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு ‘இஸட்.எஸ். இ.வி.’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் உள்ள மோட்டார் 150 பி.எஸ். திறன் மற்றும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. இதன் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 45.6 கிலோவாட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 428 கி.மீ. தூரம் வரை பயணிக்கமுடியும். இந்த பேட்டரி 80 சதவீத திறனை 30 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடும். இதில் இன்டர்னல் கம்பஸ்டன் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஹைபிரிட் மாடலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான என்ஜின் 106 பி.எஸ். திறன் கொண்டதாகவும் 141 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. ஹைபிரிட் மற்றும் பேட்டரி கார் மாடல்கள் இரண்டுமே 6 கியர்களைக் கொண்டதாக ஆட்டோமேடிக் தன்மையோடு வந்துள்ளது.

இதில் 8 அங்குல தொடு திரை உள்ளது. அத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல், சாவி தேவைப்படாத நுட்பம், ஸ்டீரிங்கிலேயே ஆடியோவைக் கட்டுப்படுத்தும் பொத்தான்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்