தினம் ஒரு தகவல் : கடல் தரும் ஆக்சிஜன்

பஞ்ச பூதங்களில் கண்ணுக்குப் புலப்படாமல் நாம் உயிர் வாழவும், பூமி ஆரோக்கியமாக இருக்கவும் பங்காற்றி வருவது காற்று. நம் கண்களுக்கு வெளிப்படையாக தெரியாவிட்டாலும் நம்மைச் சுற்றி எங்கெங்கும் காற்று விரவியிருக்கிறது. பல்வேறு வகையில் அது தாக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது.

Update: 2019-12-05 04:44 GMT
காற்று, வெளியை அடைத்துக் கொள்கிறது. அதற்கு எடை உண்டு. அனைத்து திசைகளிலும் அழுத்தத்தையும் செலுத்துகிறது. எடுத்துக்காட்டாக ஒரு கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் வைத்திருக்கிறோம் என்றால், அதில் உள்ள தண்ணீரை எவ்வளவு வெளியேற்றுகிறோமோ அவ்வளவு காற்று அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்தக் காற்று உள்ளே சென்று அழுத்துவதால்தான், உள்ளே இருக்கும் தண்ணீர் வெளியே வருகிறது.

அறிவியல் ரீதியில் பூமியின் வளிமண்டலத்தில் நிரம்பியுள்ள காற்று என்பது நைட்ரஜன் (78%), ஆக்சிஜன் (21%), நீராவி, தூசி, மற்ற வாயுக்கள் (1%) இணைந்தது. உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் காற்றை சுவாசித்தே வாழ்கின்றன. உயிரினங்கள் ஆக்சிஜனை சுவாசித்து, கார்பன்-டை ஆக்சைடை வெளிவிடுகின்றன. நேர் மாறாக, தாவரங்கள் கார்பன்-டை ஆக்சைடை சுவாசித்து ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன, பதிலாக ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. இந்த வேதிவினை தொடர்ந்து நடைபெறவில்லை என்றாலோ, இதன் சமநிலை குலைந்தாலோ உலகம் உயிர்ப்புடன் இருப்பது சாத்தியமில்லை.

உடல் இயங்குவதற்கான சக்தியை உருவாக்குவதில் ஆக்சிஜன் பெரும் பங்காற்றுகிறது. ஓரிடத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்தாலோ, மனிதன் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டாலோ உயிர் வாழ்வது சாத்தியமில்லை. ஒவ்வொரு நிமிடமும் ஒரு வளர்ந்த மனிதர் சராசரியாக 7 லிட்டர் காற்றை சுவாசித்து, வெளியே விடுகிறார். நமது நுரையீரல் நான்கு முதல் ஆறு லிட்டர் காற்றை சராசரியாக பிடித்து வைத்திருக்கக்கூடியது. அதில் ஒரு சிறு பகுதியைத்தான் நாம் சுவாசிக்கப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

காடுகளை போன்று கடல்களில் இருந்தும் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. கடலில் உள்ள ஆல்கா எனப்படும் பாசிகள் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனில் பெருமளவை உற்பத்தி செய்கின்றன. இந்தத் தாவரங்கள் சிறியதாக இருந்தாலும், பெருமளவில் இருப்பதால், ஆயிரக்கணக்கான கிலோ ஆக்சிஜனை உற்பத்தி செய்து வளிமண்டலத்துக்கு அனுப்புகின்றன.

ஆக்சிஜன் மட்டுமல்ல, காற்று நிரம்பிய வளிமண்டலம்தான் (ஓசோன் படலம்) சூரியனிலிருந்து வெளிப்பட்டு நமக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் புறஊதா கதிர்களின் வீரியத்தைக் குறைப்பதுடன், சூரியனில் இருந்து வரும் கூடுதலான வெப்பத்தை மட்டுப்படுத்தவும் செய்கின்றன.

நமக்கு இவ்வளவு நன்மைகள் செய்யும் வளிமண்டலத்தின் இன்றைய நிலைமை சொல்லிக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. பெருநகரங்கள், கடுமையாக மாசுபட்ட பகுதிகளின் மேலே உள்ள வளிமண்டலப் பகுதியில் அடர்த்தியான நச்சுக்காற்று சூழ்ந்து இருப்பதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் தெரிவிக்கிறார்கள். விண்வெளியில் இருந்து பார்க்கும்போது காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்து வருவதை அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்