பரஸ்பர நிதி துறையின் பங்குசார்ந்த திட்டங்களில் கணக்குகளின் எண்ணிக்கை 6.21 கோடியாக அதிகரிப்பு
நவம்பர் மாதத்தில், பரஸ்பர நிதி துறையின் பங்குசார்ந்த திட்டங்களில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 6.21 கோடியாக அதிகரித்துள்ளது.
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
நிர்வகிக்கும் சொத்து
பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.
நவம்பர் மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.27.05 லட்சம் கோடி என்ற புதிய சாதனை அளவை தொட்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 2.7 சதவீத வளர்ச்சியாகும். அடுத்த 10 ஆண்டுகளில் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் (ஏ.எம்.எப்.ஐ) மதிப்பீடு செய்துள்ளது.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் பரஸ்பர நிதி துறையின் பங்குசார்ந்த திட்டங்களில் 1.2 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இத்திட்டத்தில் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 6.21 கோடியாக உயர்ந்து இருக்கிறது. முந்தைய மாதத்தில் (அக்டோபர்) 3 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு இருந்தன. நவம்பர் இறுதி நிலவரப்படி பரஸ்பர நிதி துறையில் முதலீட்டாளர் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 8.65 கோடியாக உயர்ந்துள்ளது. அக்டோபர் இறுதியில் அது 8.62 கோடியாக இருந்தது.
பரஸ்பர நிதி துறையின் பங்குசார்ந்த திட்டங்களில், நவம்பர் மாதத்தில் ரூ.1,312 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது.
புதிய முதலீட்டாளர்கள்
பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.