நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் அனல்மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி இறக்குமதி 17.6% உயர்ந்தது

நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் (2019 ஏப்ரல்-டிசம்பர்) அனல் மின் உற்பத்தி நிலையங் களின் நிலக்கரி இறக்குமதி 17.6 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

Update: 2020-01-23 09:40 GMT
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி


நிலக்கரி வளம்

நம் நாட்டில் 29,900 கோடி டன் அளவிற்கு நிலக்கரி வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 12,300 கோடி டன்னை உற்பத்தி செய்து, உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இந்த நிலக்கரி வளம் 100 ஆண்டுகளுக்கு போதுமானது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாததால் அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. ஏனென்றால் அனல்மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரிதான் முக்கிய எரிபொருளாக இருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில், டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் அதானி பவர், என்.டி.பி.சி. உள்ளிட்ட மின் உற்பத்தி நிறுவனங்கள் மொத்தம்5.25 கோடி டன் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளன. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது சுமார் 17.6 சதவீதம் அதிகமாகும். அப்போது அது 4.46 கோடி டன்னாக இருந்தது.

கணக்கீட்டுக் காலத்தில், பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி. மட்டும் 19 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் இந்நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி 3.20 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, அதன் இறக்குமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது.

2017-18-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த நிலக்கரி இறக்குமதி (உயர்தர மற்றும் சாதாரண நிலக்கரி) 20.83 கோடி டன்னாக இருந்தது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) அது 23.52 கோடி டன்னாக அதிகரித்தது. அதன் மதிப்பு ரூ.1.70 லட்சம் கோடியாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 23 சதவீதம் அதிகமாகும். நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில், ஒட்டுமொத்த நிலக்கரி இறக்குமதி 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என கேர் ரேட்டிங் நிறுவனம் மதிப்பீடு செய்து இருக்கிறது.

கோல் இந்தியா

உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் உலக நிலக்கரி உற்பத்தியில் மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியாதான் முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன.

மேலும் செய்திகள்