15 வெளிநாடுகளில் தலைமை பதவிகள் வகிக்கும் 200 இந்திய வம்சாவளியினர்

அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 15 வெளிநாடுகளில் 200 இந்திய வம்சாவளியினர் தலைமை பதவிகளை வகித்து வருகிறார்கள்.

Update: 2021-02-17 03:10 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் ‘இந்தியாஸ்போரா’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதை எம்.ஆர்.ரங்கசாமி என்பவர் நிறுவி உள்ளார். வெளிநாடுகளில் இந்திய வம்சாவளியினர் எத்தனை பேர் முக்கிய பதவிகள் வகித்து வருகின்றனர் என்று இந்த அமைப்பு பட்டியல் தயாரித்து வெளியிட்டுள்ளது. இத்தகைய பட்டியல் தயாரிக்கப்படுவது, இதுவே முதல்முறை ஆகும். அரசு இணையதளங்களிலும், பொதுவெளியிலும் கிடைக்கும் தகவல்களை திரட்டி இதை தயாரித்துள்ளனர்.

அதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 15 வெளிநாடுகளில் தலைமை பதவிகளை 200-க்கு மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் வகித்து வருகிறார்கள். குறிப்பாக, அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவி வகித்து வருகிறார்.

200 பேரில் 60 பேர், கேபினட் மந்திரி அந்தஸ்து கொண்ட பதவிகளை வகித்து வருகின்றனர். அமெரிக்க எம்.பி.க்கள் அமி பேரா, ரத்னா ஒமிட்வர், பிஜி நாட்டு கல்வி மந்திரி ரோசி அக்பர் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தூதரக அதிகாரிகள், ரிசர்வ் வங்கி தலைவர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பதாக ‘இந்தியாஸ்போரா’ நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்