விடுதலை போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்கு

தமிழ்நாட்டை சேர்ந்த எண்ணற்ற தியாக சீலர்கள் இம்மண்ணின் விடுதலைக்காக தம் உயிரையும், உடைமைகளையும் இழந்தனர்.

Update: 2022-01-24 15:58 GMT
‘பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு’ என்றார் நம் தமிழ்க்கவி பாரதி. நம் பாரத திருநாட்டில் மக்கள் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு கிடந்தனர். அவர்களை மீட்கவும், இந்தியா சுதந்திரம் அடையவும் போராடிய தியாக செம்மல்களில் பலர் தமிழ்நாட்டில் இருந்தனர். பூலித்தேவன் என்ற பாளையக்காரன் தனக்குரிய நெற்கட்டான் செவ்வல் பகுதியை முற்றுகையிட்ட ஆங்கிலேயரை எதிர்த்து வென்றான். இதுவே விடுதலைப் போரின் முதல் முழக்கமாகும்.

வானம் பொழியுது, பூமி விளையுது, வெள்ளையருக்கு ஏன் வரி தரவேண்டும் என வீர முழக்கமிட்டான் வீரபாண்டிய கட்டபொம்மன். அவனைப் போலவே வீரன் ஊமைத்துரை, வேலுநாச்சியார், சிவகங்கை மருதுசகோதரர்கள், தீரன் சின்னமலை முதலானோர் ஆங்கிலேயரை எதிர்த்து வீரமரணம் அடைந்தனர். அவர்களின் உரிமைப்போர் தோற்றாலும், அவர்கள் உண்டாக்கிய விடுதலை உணர்வு வளர்ந்தது.

இந்திய திருநாட்டின் விடுதலைக்கு சுதந்திரமே எனது பிறப்புரிமை என்று முழக்கமிட்டு போராட்டத்தில் பங்கேற்றவர் பாலகங்காதர திலகர். அவருடைய வழியை தீவிரமாக பின்பற்றி ஆங்கிலேயரை தமிழகத்தில் எதிர்த்தவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார். அவரை சிறையில் அடைத்தனர். அங்கு அவர் செக்கிழுத்தார். ஆங்கிலேயர்களின் சித்ரவதைக்கு அவர் ஆளாகினார். கல்லுடைத்தார், கசையடிப்பட்டார். ஆயினும் விடுதலைக்கு தம் வாழ்வை அர்ப்பணித்தார்.

நாட்டு பற்றை துறக்காத துறவி சுப்பிரமணிய சிவா ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு பல இன்னல்களை அனுபவித்தார். சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. ஆனால் நோய் கொடுமையை கண்டுகொள்ளாமல் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர் சுப்பிரமணிய சிவா.

நாம் இருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்- அது

நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் என்றும்

சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே

துஞ்சிடோம்- இனி அஞ்சிடோம்

என்றும் முழங்கி, மூலையில் முடங்கி கிடந்தவர்களை தட்டியெழுப்பினார் நம் தேசியக்கவி பாரதியார். 

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற ராமலிங்கம் பிள்ளையின் பாடல் தமிழக விடுதலை வீரர்களின் வேதமந்திரமாக பாடப்பட்டது. ஆஷ் என்ற ஆங்கில அதிகாரியை துப்பாக்கி குண்டுக்கு இரையாக்கிவிட்டு தன்னையும் மாய்த்து கொண்டார் வாஞ்சிநாதன். ஏந்திய மூவண்ண கொடியை தனது உயிரே போனாலும் கையில் பிடித்தபடி இறந்த திருப்பூர் குமரன்.

காந்தியின் அறவழியில் மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், செயல்வீரர் காமராஜர், வ.வெ.சு. அய்யர், முத்துராமலிங்க தேவர், சத்தியமூர்த்தி போன்ற பலரும் விடுதலை போராட்டத்தில் தம்மை இணைத்து கொண்டு இன்னல் பல ஏற்றனர். இந்த தியாகிகளின் தீரமிக்க தொண்டினால் விடுதலை போரில் தமிழக வீரர்கள் ஆற்றிய பங்கு இன்றும் நம் மனதில் நிலைத்து நிற்கிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த எண்ணற்ற தியாக சீலர்கள் இம்மண்ணின் விடுதலைக்காக தம் உயிரையும், உடைமைகளையும் இழந்தனர். அவர்கள் பெற்று தந்த விடுதலையை காப்பது மண்ணின் மைந்தர்களான நமது கடமையாகும்.

மேலும் செய்திகள்