கடலூர் மீனவருக்கு 10 ஆண்டு சிறை

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடலூர் மீனவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-01-25 20:18 GMT

கடலூர் முதுநகர் அருகே உள்ள ராசாபேட்டை சுனாமிநகரை சேர்ந்தவர் வாழ்முனி மகன் தீபன்(வயது 20). மீனவரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 25-5-2020 அன்று வீட்டில் இருந்த சிறுமியை தீபன் புதுக்குப்பம் பகுதிக்கு கடத்திச்சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள கோவில் அருகில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி சிறுமியின் தாய் கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தீபன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

10 ஆண்டு சிறை

இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் தீபன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலன் கருதி, அவருக்கு தமிழக அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீட்டை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்