100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் உள்பட 5 போ் காயம்

கார் மோதி 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் உள்பட 5 போ் காயம் அடைந்தனர்.

Update: 2023-08-18 21:00 GMT

சாணார்பட்டி அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டியில் நாராயணபிள்ளை குளம் உள்ளது. இந்த குளத்தில் நேற்று காலை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் குளத்துக்கான வரத்து வாய்க்காலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த குளத்தின் அருகில் உள்ள மண்பாதையில் அதே ஊரை சேர்ந்த சேவுகபெருமாள் (வயது 35) என்பவர் தனது உறவினரின் காரை ஓட்டி பழகிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கார் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. அதனை கட்டுக்குள் கொண்டுவர சேவுகபெருமாள் முயன்றும் முடியாமல் போனது. இதற்கிடையே தாறுமாறாக ஓடிய கார், வரத்து வாய்க்காலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது மோதி நின்றது. இதில் சரளப்பட்டியை சேர்ந்த முத்தீஸ்வரி (வயது 45), மீனா (32), அவருடைய மகன் மணிகண்டன் (9), பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த பூமா (42), வெள்ளத்தாய் (37) ஆகியோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோம்பைபட்டி ஊராட்சி தலைவர் தமிழரசி, செயலர் உமா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்