திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 1000-வது கும்பாபிஷேக விழா: மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோலாகலம்

சென்னை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2023-09-10 04:16 GMT

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள தொன்மையான கோவில்களில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களை கண்டறிந்து கும்பாபிஷேகம் நடத்தும் பணிகளை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 26 மாதங்களில் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக 1,000-வது கும்பாபிஷேகம் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று (10-ந்தேதி) கோலாகலமாக நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று கும்பாபிஷேக விழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு கலச புறப்பாடும், 7.30 மணிக்கு அனைத்து கோபுரங்கள் மற்றும் இராஜகோபுரத்திற்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழாவில் கௌமார மடம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள். திருக்கயிலாய பரம்பரை வேளக்குறிச்சி ஆதீனம் சீர்வளர்சீர் சத்ய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், சிவநெறிச் செம்மல் கே.பிச்சை குருக்கள், சிவபுரம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார், பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சிவாச்சாரியார் செல்வ சுப்பிரமணிய குருக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்