ஐம்பொன் சிலைகளை திருடிய 2 சிறுவர்கள் கைது

பெரியகுளம் அருகே ஐம்பொன் சிலைகளை திருடிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-22 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 53). புரோகிதர். கடந்த 12-ந்தேதி இவர், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 3 ஐம்பொன் சிலைகள், சிலையின் கழுத்தில் இருந்த ½ பவுன் தாலி பொட்டு மற்றும் ரூ.30 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்து பழனிவேல் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து சிலைகள் திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் 17 வயதுடைய 2 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆள் இல்லாததை நோட்டமிட்ட 2 சிறுவர்களும் பழனிவேல் வீடு புகுந்து அங்கிருந்த சிலைகள் மற்றும் பணத்தை திருடி சென்றதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட முருகன், வள்ளி, தெய்வானை சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த சிறுவர்கள் மதுரையில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்