தாயை கொன்றவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குமரி மாவட்டத்தில் தாயை கொன்றவர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-18 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தாயை கொன்றவர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கில் கைது

பூதப்பாண்டி திட்டுவிளையை சேர்ந்தவர் மோகன் தாஸ் (வயது 51). இவர் சொத்து பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தாயார் அமலோத்பவத்தை அரிவாளால் வெட்டி ெகாலை செய்தார். இதுதொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் மோகன்தாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்கக் கோரி கலெக்டர் ஸ்ரீதருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து பூதப்பாண்டி போலீசார் நேற்று மோகன்தாசை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த மோகன் தாஸ் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்.

பாலியல் வழக்கு

இதேபோல் கிள்ளியூர் தாலுகா அனந்தமங்கலத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (39). இவர் மீது மார்த்தாண்டம் மற்றும் கொல்லங்கோடு போலீஸ் நிலையங்களில் பல பாலியல் வழக்குகள் உள்ளன. இவர் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பரமேஸ்வரனை மார்த்தாண்டம் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

தற்போது கைது செய்யப்பட்டவர்களையும் சேர்ந்து இந்த ஆண்டில் இதுவரை 35 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்