‘அனைவரின் விருப்பத்துக்கு ஏற்ப நல்ல முடிவு எடுக்கப்படும்’ ஆதரவாளர்கள் மத்தியில் தீபா பேச்சு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு, தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரது மறைவு அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சமாதியை காண தி

Update: 2017-01-15 21:30 GMT

சென்னை,

முதல்–அமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு, தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரது மறைவு அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சமாதியை காண தினமும் ஏராளமானோர் வருகின்றனர். அவ்வாறு வரும் தொண்டர்களில் பலரும் சென்னை தியாகராயநகரில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீடு முன்பும் குவிந்து வருகின்றனர். தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபத்தில், சென்னையில், தீபாவுக்கு ஆதரவாக ஆலோசனை கூட்டமும் நடந்தது. நாளை (செவ்வாய்க்கிழமை) எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்தநாளில், அவர் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலையும் தீபா தனது ஆதரவாளர்களை சந்தித்தார். அவரது வீட்டு முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் ஜெயலலிதா புகழ் ஓங்குக என்றும், தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் கோ‌ஷம் எழுப்பினர்.

ஆதரவாளர்கள் மத்தியில் தீபா பேசும்போது, ‘நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் செயல்படுவேன். உங்கள் அனைவரின் விருப்பத்துக்கு ஏற்ப நல்ல முடிவு எடுக்கப்படும். உங்களுக்காக தொடர்ந்து செயல்படுவேன்’ என்று கூறினார்.

முன்னதாக தீபா ஆதரவாளர்கள் திரைப்பட நடிகர் ஆனந்தராஜை சந்தித்து தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்