சட்டமன்றத்தில் சுதந்திரமான வாக்கெடுப்பு நடப்பதை உறுதி செய்ய வேண்டும் கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சட்டமன்றத்தில் சுதந்திரமான வாக்கெடுப்பு நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக கவர்னரை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;

Update:2017-02-10 04:30 IST
சென்னை, 

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது மக்கள் ஆட்சி மாண்பை சிதைக்கும் செயல் என்றும், சட்டமன்றத்தில் சுதந்திரமான வாக்கெடுப்பு நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக கவர்னரை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நட்சத்திர விடுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் 

காபந்து முதல்–அமைச்சராக நீடிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தன்னிடம் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என தனது கட்சித்தலைமையின் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அவர் ராஜினாமா கவர்னரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.

இந்நிலையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது எந்தத் தலைமையின் கீழ் இருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்களை சொகுசு பஸ்களில் ஏற்றிச்சென்று, நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிணைக்கைதிகள் 

சுதந்திர ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் இப்படி பிணைக் கைதிகள் போல சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை சிதைக்கின்ற செயலாக இருக்கிறது.

ஆளுங்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் பின்னர் காபந்து முதல்–அமைச்சரை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

அப்படியானால், உண்மையாகவே இவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. பிணைக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை நிலவுகிறது.

இத்தகைய சூழலில், தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் மாநிலத்தில் நிலையான, சுதந்திரமான, சட்டப்பூர்வமான வழியிலான ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமைப் பொறுப்பில் இருக்கிறார். மக்களின் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டத்திற்குப் புறம்பான நிர்பந்தங்களாலும், மிரட்டல்களாலும் ஏதேனும் ஒரு பக்கத்திற்கு செல்கிறார்களா, இதற்கான பலன்கள், வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.

சட்டமன்ற வாக்கெடுப்பு 

ஆகவே, கவர்னர் அரசியல் சட்டம் மற்றும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பின் வழிகாட்டுதல் அடிப்படையிலும் உரிய முடிவுகளை எடுத்து சுதந்திரமான சட்டமன்ற வாக்கெடுப்பை உறுதிசெய்து ஜனநாயக மாண்புகளை காத்திடுமாறு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்