13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.;
கோப்புப்படம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அஞ்சாசேரி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் ராஜேந்திரன் (30 வயது), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 19.8.2020 அன்று மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை, தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் ராஜேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட ராஜேந்திரன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.