முட்டை கொள்முதல் ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு

புதிய சத்துணவு திட்டத்துக்காக நடப்பு ஆண்டில் முட்டை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

Update: 2017-07-11 21:45 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், நாமக்கலை சேர்ந்த கே.இளையராஜா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

முட்டை கொள்முதல்

வெளிநாட்டிற்கு கருவாடு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்கிறேன். கோழிப்பண்ணையும் நடத்தி வருகிறேன். சத்துணவு திட்டத்துக்காக சமூக நலம் மற்றும் சத்துணவு துறை கோழி முட்டை கொள்முதல் செய்வது தொடர்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை இயக்குனர் ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி வரை நாள் ஒன்றுக்கு 52 லட்சம் முட்டைகளை கொள்முதல் செய்ய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய நிபந்தனை

இந்த ஒப்பந்த அறிவிப்பில், தேவையில்லாத கடுமையான நிபந்தனைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

டெண்டரில் பங்கேற்பவர்கள் ரூ.4.75 கோடியை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளிடமிருந்து தணிக்கை கணக்கு, வருமான வரிகணக்கு, பி.ஐ.எஸ். தரச்சான்று, முட்டைகளை வினியோகம் செய்ய தகுதி உள்ளதற்கான சான்றிதழ் என்று பல ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள ஒப்பந்ததாரர்களை வெளியேற்றவும், புதியவர்கள் யாரும் இந்த ஒப்பந்த பணியை எடுப்பதை தடுக்கவும், தாங்கள் விரும்பும் நபர்களுக்கு இந்த ஒப்பந்த பணியை வழங்குவதற்காகவும் இந்த புதிய நிபந்தனைகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இந்த நிபந்தனைகளால் நானும், பிற தகுதியுள்ள ஒப்பந்ததாரர்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

ரத்து செய்யவேண்டும்

அதுவும், மாநிலம் முழுவதும் முட்டை வினியோகம் செய்ய ஒரே நிறுவனத்துக்கு ஒப்பந்த பணி வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 52 லட்சம் முட்டையை ஒரே நிறுவனம் மாநிலம் முழுவதும் வினியோகம் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. கோழி முட்டையிட்டு 3 நாட்களுக்குள், அதை வினியோகம் செய்து விடவேண்டும்.

இதையெல்லாம் தெரிந்து இருந்தும், தாங்கள் விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கு இந்த ஒப்பந்த பணியை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குனர் உருவாக்கியுள்ள புதிய நிபந்தனைகளை ரத்து செய்யவேண்டும். வருகிற 14-ந் தேதி இந்த ஒப்பந்த உரை திறக்கப்பட உள்ளது. இதற்கு தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தடை மறுப்பு

இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.டி.எஸ். மூர்த்தி, ‘முட்டை கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்படுகிறது. இதில் எந்த விதிமீறலும் இல்லை. எனவே, தடை எதுவும் விதிக்கக் கூடாது’ என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முட்டை கொள்முதல் ஒப்பந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். இந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்