ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம் -டாக்டர் சரவணன்

ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம் என விசாரணை கமிஷன் முன் ஆஜரான பிறகு டாக்டர் சரவணன் கூறினார்.

Update: 2017-11-23 06:59 GMT
சென்னை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்   நேற்று விசாரணையை தொடங்கியது.  விசாரணை ஆணைய அலுவலகத்தில் கூடுதல் ஆவணங்களுடன் திமுக பிரமுகர் டாகடர் சரவணன் வருகை தந்து  நேரில் ஆஜரானார். நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்திடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நேற்று  கடைசி நாளாக இருந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக யார் எப்போழுது  பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்தாலும் ஏற்றுக்கொள்வோம் என கூறப்பட்டு உள்ளது.

நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி கூறும் போது  ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2 அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பபட்டு உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக யார் எப்பொழுது  பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்தாலும் ஏற்றுக்கொள்வோம். ஜெயலலிதா மரண விவகாரத்தில் யாராக இருந்தாலும் விசாரிக்கப்படும் என கூறினார்.

அதன் படி இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் முன்பு அரசு மருத்துவர்கள் ஆஜரானார்கள். அரசு மருத்துவர்கள் நாராயணபாபு, மருந்துகள் துறை இயக்குநர்  மயில்வாகனன் ஆகியோர் ஆணையம் முன்பு ஆஜரானார்கள். மருத்துவ கல்வி முன்னாள் இயக்குநர் விமலா,  விசாரணை கமிஷன் முன்பு ஆஜரானார். அதுபோல் திமுகவை சேர்ந்த டாக்டர்  சரவணன் ஆஜரானார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையிடம் சரவணன் புகார் அளித்துள்ளார்.

அதன் பின் அவர் அளித்த பேட்டியில், வேட்பு மனுவில் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம். எங்களது கோரிக்கையை விசாரணை ஆணைய தலைவர் ஏற்றுக்கொண்டார் மேலும் ஜெயலலிதா கைரேகை போலி என்பதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளது என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் சுயநினைவுக்கு வந்ததாக மருத்துவ அறிக்கையில் இல்லை. ஜெயலலிதா ஆளுநருக்கு, எழுதிய கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையதா என ஆய்வு மேற்கொள்ளவும் கோரிக்கை வைத்துள்ளோம்.  ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான எங்களுடைய சந்தேகங்களையும் முன்வைத்துள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்