ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து போட்டி- டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து போட்டியிடுவேன் என டிடிவி தினகரன் கூறினார்

Update: 2017-11-24 09:41 GMT
திருப்பூர்

டிடிவி தினகரன் அணியின்  5 மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அணியின்  அவைத் தலைவர் அன்பழகன், ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் மீண்டும் போட்டியிடுவார். என அறிவித்தார்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டி குறித்து  "நாளை நடைபெறும் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் கூறியதாவது :-

நிர்வாகிகள் முடிவின்படி, ஆர்.கே. நகரில் நிச்சயமாக போட்டியிடுவேன். இரட்டை இலை சின்னத்தை மீட்போம்,இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து தொப்பி சின்னத்தில் போட்டியிட்டு  இரட்டை இலையை எதிர்த்து போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை சட்டப்படி மீட்டெடுப்போம். 27ஆம் தேதி ஐகோர்ட்  அல்லது சுப்ரீம் கோர்ட்டை  அணுகுவோம்.தேர்தல் ஆணைய தீர்ப்பு வந்ததும், இடைத்தேர்தல் அறிவித்ததில் இருந்தே இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சதி நடந்துள்ளது தெரிகிறது.பாஜகவின் சதிக்கு முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் உடந்தை. கட்சியை காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது; ஆட்சியாளர்களுக்கு கட்சி குறித்து கவலையில்லை

ஆர்.கே. நகரில் போட்டியிட சொன்னதே சசிகலாதான். வரும் 29ஆம் தேதி சசிகலாவை சந்திக்க உள்ளேன். வாக்கு கேட்கும்போது சசிகலாவின் புகைப்படத்தை பயன்படுத்துவோம்.

இடைத்தேர்தலின்போது சின்னத்தை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?.முதல் சுற்றில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும், இறுதி சுற்றில் நமக்கே வெற்றி..சசிகலா தலைமையில் கட்சி இயங்கினால் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்