மீண்டும் உங்களிடம் வருவேன் சொந்த ஊர் பரமக்குடியில் உருக்கமாக பேசிய கமல்

மீண்டும் உங்களிடம் வருவேன் என சொந்த ஊர் பரமக்குடியில் உருக்கமாக கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan #KamalPartyLaunch #tamilnews

Update: 2018-02-21 11:32 GMT
சென்னை

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து கமல் இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட கமல், அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய பின்னர், தனது பயணத்தை தொடர்ந்தார்.

மதுரை பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் தனது சொந்த ஊரான பரமக்குடியில் அவர் மக்கள் மத்தியில் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. கமல் வருகையை எதிர்பார்த்து ரசிகர்கள், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதன்படி பரமக்குடிக்கு இன்று அவரது வாகன அணிவகுப்பு வந்ததும். அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கமலை உற்சாகமாக வரவேற்றனர். ஆனால், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி கமல் பேசவில்லை. வாகனத்தில் நின்றபடியே சிறிது நேரம் பேசினார்.

எவ்வளவு அன்பு இருந்தால் இந்த வெயிலிலும் உங்கள் ஊர் பையனை பார்க்கக் காத்திருப்பீர்கள். இதற்கு என்ன கை மாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. நிறைய வேலை இருக்கிறது. மீண்டும் உங்களிடம் வருவேன். மதுரையில் நடக்கும் நிகழ்வுக்கு வரும் டெல்லி முதல்வரை வரவேற்க செல்வதால் உடனடியாக கிளம்பிச்செல்கிறேன். மீண்டும் உங்களிடம் பேசுவேன்," என்றார். 

மதுரையில் கமல் பொதுக்கூட்ட மைதானத்துக்குள் கடும் சோதனைக்கு பிறகே பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. பொதுக்கூட்ட மைதானம் 4 புறமும் தடுப்பால் அடைக்கப்பட்டு இரு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருவாயில்களிலும் சோதனைக்கு பிறகே மைதானத்துக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்