நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் மறைவுக்கு பலவேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். #RIPNatarajan

Update: 2018-03-20 05:09 GMT
சென்னை

புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன்  இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 74. நடராஜனின் மறைவுக்கு  பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன்:

நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழ விடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: நடராஜன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா,

புதிய பார்வை பத்திரிகை ஆசிரியரும், சசிகலா அவர்களின் கணவரும், பிரபல அரசியல் தலைவருமான நடராஜன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இதயபூர்வமான இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் 

மொழிப்போர் வீரரான நடராஜனின் மறைவுக்கு, அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். 

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி:

சசிகலாவின் கணவர் நடராஜனின் மறைவு பேரிழப்பு. 

சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு, கி.வீரமணி, ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, எ.வ.வேலு, கராத்தே தியாகராஜன், நாஞ்சில் சம்பத், ராஜமாணிக்கம், வைரமுத்து, பாரதிராஜா, கலைப்புலி தாணு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது;-

நடராஜனின் மறைவு அவரது குடும்பத்திற்கு, திராவிட இயக்கங்களுக்கு பேரிழப்பு. நடராஜனின் நினைவைப் போற்றும் வகையில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்றும் இருக்கும்  என கூறினார்.

ம.நடராஜன் மறைவுக்கு பாஜக மூத்த தலைவர் தருண் விஜய் இரங்கல் தெரிவித்து உள்ளார். ம.நடராஜனின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என கூறி உள்ளார்.

விவேக், கிருஷ்ண பிரியா, ஷகிலா உள்ளிட்டோரும் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்