போலீஸ் ஏட்டு கொலையில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது

நாங்குநேரி அருகே நடந்த போலீஸ் ஏட்டு கொலையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-05-12 19:33 GMT
இட்டமொழி, 

நாங்குநேரி அருகே நடந்த போலீஸ் ஏட்டு கொலையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில், தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் ஜெகதீஷ் துரை. இவர் கடந்த 6-ந்தேதி இரவில் நாங்குநேரி அருகே மணல் கடத்தல் கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஏட்டு கொலை தொடர்பாக தாமரைகுளத்தை சேர்ந்த கிருஷ்ணன், கல்மாணிக்கபுரத்தை சேர்ந்த மணிக்குமார், மாற்றுத்திறனாளியான ராஜாரவி, அமிதாப்பச்சன் மற்றும் பாலிடெக்னிக் மாணவர் என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தாமரைகுளத்தை சேர்ந்த மாடசாமி மகன் முருகன் (வயது 28) என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவர் கேரளாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று முருகனை தேடி வந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்து கேரள எல்லை பகுதியில் ஒருவரிடம் பந்தல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த முருகனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் ரகசிய இடத்தில் வைத்து முருகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்