சென்னையில் 5-ந் தேதி ஆர்ப்பாட்டம் வைகோ அறிவிப்பு

வேல்முருகனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே 5-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்துள்ளார்.

Update: 2018-06-01 20:44 GMT
சென்னை,

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டுக்கு ஆளானவர்களை பார்க்க சென்றபோது கைது செய்யப்பட்டு உணவும், தண்ணீரும் அருந்த விடாமல் 24 மணி நேரத்துக்கு பின்னர் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டதால், அவர் உணவும், தண்ணீரும் அருந்தாமல் புழல் மத்திய சிறையில் அறப்போர் நடத்திய நிலையில், நான் அவரை சந்தித்து சிறுநீரகங்கள் பாதித்து உடல்நலம் பாழாகிவிடும் என எடுத்துக்கூறி உணவருந்தச் செய்தேன். அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், கடந்த 30-ந் தேதி மாலையில் தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் இந்திய குற்றவியல் சட்டத்தின் கடுமையான பிரிவுகளில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனிதாபிமானமின்றி மீண்டும் புழல் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அவரை அடைத்துவிட்டனர்.

தமிழக அரசின் பாசிச போக்கையும், போலீசாரின் அடக்குமுறையையும் கண்டித்து வருகிற 5-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், ம.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்